Fake News: "ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல்".. அப்படின்னு ஒரு "கார்டு" உலா வருது.. நம்பாதீங்க!

Su.tha Arivalagan
Feb 25, 2024,05:33 PM IST

சென்னை: ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும், மே 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று கூறி ஒரு கார்டு உலா வருகிறது. ஆனால் இது போலி என்று தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.


நாடாளுமன்றத்தின் லோக்சபாவுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. விரைவில் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டுள்ளன. மக்களும் ஆர்வத்துடன் தேர்தல் திருவிழாவை கண்டு களித்து அதில் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர்.


இந்த நிலையில் தேர்தல் தேதி குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவிக் கொண்டுள்ளன. தேர்தல் தேதி என்று பல பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரவியபடி உள்ளன. இதனால் இந்த வதந்தி பரப்புவோருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. இந்த தொடர் குழப்பங்களால் மக்களும் தேவையில்லாமல் குழம்பி, அதை வாட்ஸ் ஆப்பில் மற்றவர்களுக்கு அனுப்பி அவர்களையும் குழப்பும் நிலை உருவாகிறது.




இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு கார்டு சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டுள்ளது. அதில்,  மார்ச் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியாகும். மார்ச் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறும். மே 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அட்டவணையைப் பார்த்துமே புரிந்து கொள்ளலாம் இது ஒரு போலியான அட்டவணை என்று. ஆனால் வாட்ஸ்ஆப்பில் எது வந்தாலும் உடனே பத்து பேருக்கு பார்வர்ட் செய்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கும் ஒரு மைன்ட்செட் பலருக்கும் உள்ளது என்பதால் இதையும் பலருக்கு பலர் பரப்பிக் கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் இது ஒரு போலியான கார்டு என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தில்,  தேர்தல் அட்டவணை தொடர்பாக ஒரு போலியான செய்தி உலா வந்து கொண்டுள்ளது. இது போலியானது, தவறானது. தேர்தல் ஆணையம் இதுவரை எந்த தேதியையும் இன்னும் முடிவு செய்யவில்லை. முறையாக செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டித்தான் தேர்தல் தேதியை அறிவிப்போம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.