முகூர்த்த நாள் வருவதால்.. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம்

Su.tha Arivalagan
Oct 11, 2023,05:50 PM IST

டெல்லி: முகூர்த்த நாள் இடையில் குறுக்கிடுவதால் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றியுள்ளது தேர்தல் ஆணையம்.


ராஜஸ்தான் சட்டசபைக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும், டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் முகூர்த்த நாள் குறுக்கிடுவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தன. குறிப்பாக பாஜக சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த முகூர்த்த நாளில் மிகப் பெரிய அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்றும் கருத்து கூறப்பட்டது.




இதையடுத்து  தற்போது தேர்தல் தேதியை மாற்றியமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.  அதேசமயம் திட்டமிட்டபடி டிசம்பர் 3ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும். அதில் மாற்றம் கிடையாது.


ராஜஸ்தான் தவிர மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சட்டிஸ்கர், மிஸோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குட்டி மாநிலமான சட்டிஸ்கருக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ம.பி, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பெரிய மாநிலங்கள் மற்றும் மிஸோரமுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.