லோக்சபா தேர்தல்: 3ம் கட்ட தேர்தலில்.. 65.68% வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Manjula Devi
May 11, 2024,05:38 PM IST

டெல்லி: மே 7ஆம் தேதி நடந்து முடிந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. மே ஏழாம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த மூன்றாம் கட்ட தேர்தல், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில்  காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 



பொதுமக்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.


மே ஏழாம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 85.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 5 தொகுதிகளில் 59.15 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளில் 71.98%, கோவாவில் 2 தொகுதிகளில் 76.06 சதவிகிதமும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி/டாமன் மற்றும் டையூ 2 தொகுதிகளில் 71.31 சதவீதமும், குஜராத் 25 தொகுதிகளில் 60.13 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.


கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 71.84 சதவீதமும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளில் 63.55%, உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் 57.55%, மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளில் 66.75%,  மேற்கு வங்கத்தில் நாலு தொகுதிகளில் 77.53% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.