ஈரோடு கிழக்கு.. "குக்கர், விவசாயி"க்கு மோதிய சுயேச்சைகள்.. யாரு ஜெயிச்சாங்க பாருங்க!

Su.tha Arivalagan
Feb 11, 2023,09:37 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையாக போராடி கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுள்ளது. அதேபோல அமமுக போட்டியிடும் குக்கர் சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் களை கட்டியுள்ளது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகி விட்டது. இந்த நிலையில் சின்னங்கள் ஒதுக்கீட்டின்போது சில பரபரப்பான காட்சிகளை வேட்பாளர்கள் கண்டனர்.

டிடிவி தினகரனின் அமமுக கட்சி வழக்கமாக குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். ஆனால் இந்த முறை அதை சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் தேர்தல் ஆணையம் சேர்த்து விட்டது. எனவே அதை உங்களுக்கு ஒதுக்க முடியாது என்று ஏற்கனவே அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதனால் கோபமடைந்த அக்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில் சின்னங்கள் ஒதுக்கீட்டின்போது குக்கர் சின்னம் யாருக்கு என்ன விவாதம் வந்தபோது நான்கு சுயேச்சைகள் அதற்குக் கடுமையாக போட்டியிட்டனர். எங்களுக்குத்தான் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததால், வழக்கம் போல குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்க முடிவானது. அதில் ராஜா என்ற வேட்பாளரின் பெயர் வரவே அவருக்குப் போய் விட்டது குக்கர். விரும்பிய சின்னம் கிடைத்ததால் பெருத்த மகிழ்ச்சியில் கிளம்பிச் சென்றார் ராஜா.

கரும்பு விவசாயி சின்னத்துக்குப் போட்டி

அதேபோல நாம் தமிழர் கட்சி வழக்கமாக கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறது. ஆனால் சின்னம் ஒதுக்கீட்டின்போது நாம் தமிழர் கட்சிக்கு அதை தர முடியாது என்று முதலில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது சுயேச்சை சின்னம் என்று கூறியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த நாம் தமிழர் கட்சி தரப்பு கடுமையாக வாதிட்டது. மறுபக்கம் 2 சுயேச்சை வேட்பாளர்கள் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்று போட்டியிட்டனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது.

இருப்பினும் பின்னர் தங்களது நிலைப்பாட்டை  மாற்றிக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.