எடு அந்த தபால் அட்டையை.. "கண்மணி அன்போடு".. அட அது இல்லப்பா.. இப்படி.. வாவ் இது நல்லாருக்கே!

Manjula Devi
Apr 04, 2024,05:08 PM IST

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் பெற்றோர்களுக்கு,100% வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள் என்பதை அஞ்சல் அட்டையில் எழுதி தேர்தல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 


அப்போது தேவகோட்டை வருவாய் கோட்டாசிரியர் பால்துரை பள்ளிக்கு வந்து மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சிகளை பார்வையிட்டு வாழ்த்தினார்.




ஜனநாயகத் திருவிழாவிற்காக நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும், நட்சத்திர பிரபலங்களும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஓட்டு போடுவது.. நமது உரிமை.. நம் கடமை என்பதை வலியுறுத்தி பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் தேர்தலின் அவசியத்தை கூறி வருகின்றனர். அதேசமயம் தேர்தலில் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.




அந்த வரிசையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்  அனைத்து பெற்றோர்களுக்கும், நண்பர்களின் பெற்றோர்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை மூலமாக அவரவர் வீட்டு முகவரிக்கு தேர்தல் விழிப்புணர்வு கடிதத்தை எழுதினார்கள். அந்தக் கடிதத்தில் விலைமதிப்பில்லா வாக்கினை மறவாதீர். அனைவரும் 100% வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். தேர்தல் நாள் ஏப்ரல் 19. என்பதை அட்டையில் எழுதி வலியுறுத்தினர்.




இந்த நிகழ்வினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகோட்டை வருவாய் கோட்ட ஆசிரியர் பால்துரை பள்ளிக்கு வந்து மாணவ மாணவர்களின் விழிப்புணர்வு உத்தியை பார்வையிட்டு பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், மாணவர்கள் அனைவரும் உங்களின் பெற்றோர்களிடம் அன்பாக பேசி அவர்களை ஓட்டு போடும் வரை தூங்க விடாதீர்கள். பல கிராமங்களில் தேர்தல் நாள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சிகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் அஞ்சல் அட்டை மூலம் பள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு என்கிற புதிய முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறினார்.