உங்க வீட்டில் முதியவர்கள் இருக்கிறார்களா.. அப்ப இந்த இலவச.. ஆன்மீக சுற்றுலாவிற்கு விண்ணப்பிங்க!

Manjula Devi
Jan 11, 2024,06:15 PM IST

சென்னை: உங்க வீட்டில் முதியவர்கள் இருக்கிறார்களா.. அப்படி என்றால் தமிழக அரசு அறிவித்துள்ள மூத்த குடிமக்கள் கட்டணமில்லா ஆன்மீக சுற்றுலாவிற்கு விண்ணப்பித்து அவர்கள் ஆசைப்படும் ஆன்மீகத் தலங்களைச் சுற்றிப் பார்க்க உதவுங்கள். இந்து சமய அறநிலையத்துறை இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.


இந்த சுற்றுலாவுக்குச் செல்வதற்கான முதல் தகுதி அவர்கள் மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf என்ற இணையதளத்தில் போய் இதற்காக விண்ணப்பிக்கலாம். இன்று முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் விண்ணப்பிக்கும் 200  நபர்களை முதற்கட்டமாக அழைத்துச் செல்வர். மற்றவர்களை அடுத்தடுத்த பயணங்களில் அழைத்துச் செல்ல  அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் கட்டணமில்லா ஆன்மீக சுற்றுலா செல்லும் திட்டமே இது.




எவ்வளவோ தடைகளை மீறி நம்மை வளர்த்து ஆளாக்கி, நமக்கு பாலூட்டி, சீராட்டி, வளர்த்து, வேலை வாங்கி கொடுத்து, அவர்களின் பணிகளை சிறப்பாக செய்து வந்த மூத்தோர்களின் அன்பை, பெற்ற பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்ற பிள்ளைகளே உலகம் ..அவர்களுடன் வசிக்கும் வீடே சொர்க்கம் ..எ ன வாழும் அவர்களுக்கு பிடித்த  கோவில், குளம், வெளி இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மனதிருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.


வாழ்நாள் முழுவதும் நமக்காக பாடுபட்டு வளர்க்கும் பெற்றோர்களிடம் உங்கள் கடமையைத் தானே செய்கிறீர்கள் என்று கடுமையாக பேசுகிறோம். நாமும்  இதே போன்ற சூழ்நிலையை அனுபவிக்க தான் போகிறோம். நமக்கும் இதே நிலைமைதான். அதனால் அவர்களின் அனுபவத்தை நாம் புரிந்து கொண்டு வாழப் பழக வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டு வாழ முடியும். ஆனால் இந்த காலகட்டத்தில் முதியவர்களின் அனுபவங்களையும் வாழ்க்கை பயணத்தையும் ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவரவர் இஷ்டத்திற்கு வாழ்ந்து வாழ்வை தொலைத்து வருகின்றனர். இனியும் இதுபோல் செய்யாமல் அவர்களையும், அவர்களது அனுபவங்களையும், புத்திசாலித்தனத்தையும் ,நம் அனுபவ பாடங்களாக எடுத்துக்கொண்டால் நாமும் வாழ்க்கையில் முன்னேற முடியும். 


அப்படிப்பட்ட பெரியவர்களின் ஆசிகளைப் பெற, அவர்களின் ஆசை என்னவென்று அறிந்து, அதனை நிறைவேற்ற வேண்டும். கடைசி காலத்தில் அவர்களுக்கு என்ன ஆசை இருக்கும்.. ஊர் ஊராக.. கோயில் கோயிலாக.. சென்று புண்ணியங்களை சேகரிக்க வேண்டும்.. அதுவும் பெற்ற பிள்ளைகளுக்காக புண்ணியங்களை சேர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவர்களின் ஆசைகளையும் கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு நாம் அதனை செயல்படுத்த வேண்டும். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.. பயன்படுத்திக்கங்க.