இந்திய ராணுவ வீரர்கள் சூப்பர்...  எகிப்து ராணுவக் குழு பெரும் மகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Jan 26, 2023,01:12 PM IST
டெல்லி: கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ளோம். இந்திய ராணுவத்தினர் எங்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர். எங்களது நாட்டில் இருக்கும் உணர்வுதான் உள்ளது என்று இந்தியா வந்துள்ள எகிப்து ராணுவக் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.



இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து நாட்டு ராணுவக் குழுவும் பங்கேற்றுள்ளது. இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் எகிப்து ராணுவக் குழு பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்காக சில நாட்களுக்கு முன்பே எகிப்து ராணுவக் குழு டெல்லி வந்து விட்டது. மொத்தம் 144 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் தலைவர்  கர்னல் மஹமூது முகம்மது அப்தெல்பட்டா எல்கரஸாவி கூறுகையில்,  இந்தியா மாபெரும் நாடு. இது எங்களது முதல் இந்திய பயணம். எகிப்தைப் போலவே, இந்தியாவும் மிகவும் சிறப்பான நாகரீகத்தைக் கொண்ட நாடு.  கடந்த சில நாட்களாக இங்கு தங்கியுள்ளோம். இந்திய ராணுவத்தினர் எங்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். எங்களது நாட்டில் இருப்பது போலவே உணர்கிறோம் என்றார் அவர்.

இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வது குறித்து எகிப்து ராணுவக் குழுவினர் அனைவருமே பெரும் மகிழ்ச்சியுடனும், ஒரு விதமான நெகிழ்ச்சியுடனும் உள்ளனர். எகிப்து ராணுவத்தின் மகிமையை உலகமே பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு நன்றி என்று அவர்கள் கூறியுள்ளனர்.