மாணவர்களுக்கு சூப்பர் செய்தி: கல்விக்கடன் ரூ. 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு - தமிழக அரசு

Meenakshi
Jun 11, 2024,05:04 PM IST

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொதை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பான்மையானவர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 




இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி மிகவும் அவசியம். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என கருதி, தமிழக முதல்வரின் உத்தரவு படி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்ற பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் ரூபாய் 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 


கல்விக்கடன் பெரும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும்.


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலைப் பட்டப் படிப்புக்கும், தொழில் முறை படிப்புகளுக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்குகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கப்படுகின்றன.


தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க மேலாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நிறுவனங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கல்வி கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள வேண்டி கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.