அட.. சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லீங்க.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

Meenakshi
Jun 08, 2024,05:35 PM IST

சேலம்: 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தலுக்கு பின்னர் சேலம், ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மீண்டும்  2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இது திண்ணம். பன்னீர்செல்வம் கட்சியை விட்டு விலகிப் போயிட்டாரு, அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்திட்டு இருக்காரு,  அவர் என்னன்னமோ கனவு கண்டார். கனவு பலிக்கல. அந்த வருத்தத்துல அந்த வெறுப்புல இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லிட்டு இருக்காரு.




சட்டமன்றத் தேர்தலுக்கு மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்றத் தேர்தல் வந்தால் மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி வெற்றி தோல்வியை கண்டு வருகின்றன. ஆட்சி அதிகார பலம், பண பலத்தை வைத்து பல கட்சிகள் பிரசாரம் செய்தன. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரச்சாரம் செய்தேன். திமுக சார்பில் பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.மாறுபட்ட கூட்டணியில் மாறு பட்ட வெற்றி கிடைக்கும். மாறி மாறி தான் அரசியலில் கட்சிகள் வரும். 


அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதிமுக மீண்டும் வலுப்பெறும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. 


தேசிய கட்சி வெற்றி பெறும் வரை நம்மை பயன்படுத்தி கொள்கின்றனர் பின்னர் கண்டு கொள்வதில்லை. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளனர்.  பாஜக தமிழகத்தில் வளர்ந்து விட்டதை போல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.