பாஜகவுடன் டிஸ்கஷன்..  இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Sep 14, 2023,11:57 AM IST
டெல்லி: பாஜக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லிக்கு செல்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 

இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ,சத்தீஸ்கர், தெலுங்கானா ,மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வரவுள்ளது.



இதில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக முட்டி மோதிக் கொண்டுள்ளன.  இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி   உள்ளனர் .தற்போது அடிக்கடி பெரும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா , உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பை ஏற்று அதிமுக பொதுச் செயலாளர் இன்று விமான மூலம் டெல்லி செல்கிறார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியோடு எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சேர்வது உறுதியாகி வருகிறது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினர் தமிழகத்தில் எப்படி ஆயினும் ஐந்து தொகுதிகள் வென்றுவிட வேண்டும் என மும்மரம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும்.