மேலே "பாஸ்" இருக்கும்போது "அவரை"ப் பத்தி எதுக்குப் பேச்சு.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Apr 23, 2023,03:06 PM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். டெல்லியில்தான் பாஜகவின் பொறுப்பாளர்கள் உள்ளனர். அப்படி இருக்கையில் இங்கே உள்ளவர் பத்தி என்னிடம் கேட்காதீங்க என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. அண்ணாமலை குறித்த பேச்சையே எடப்பாடி பழனிச்சாமி விரும்புவதில்லை. செய்தியாளர்கள் சமீபத்தில் அதுகுறித்துக் கேட்டபோது, எதுக்குங்க எப்பப் பார்த்தாலும் அவரையே கேட்டுட்டு இருக்கீங்க. நீங்க இப்படி பேசிப் பேசித்தான் அவரை வளர்த்து விட்டிருக்கீங்க. அவரைப் பத்தி இனிமேல் என்னிடம் பேசாதீங்க. மூத்த பண்பான தகுதியான தலைவர்கள் பற்றி என்னிடம் கேளுங்க பேசறேன். அவரைப் பத்தியெல்லாம் பேசாதீங்க என்று காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில்  இன்று மீண்டும் அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டனர். அதற்கு அவர், அவரைப் பத்தி கேக்காதீங்கன்னு நான் தான் சொல்லிருக்கேனே.. திரும்பத் திரும்ப ஏங்க கேட்கறீங்க




அதிமுக - பாஜக கூட்டணி குறித்து நிர்ணயிப்பவர்கள் டெல்லியில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி , அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர்தான் பாஜகவின் பொறுப்பாளர்கள். மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர் குறித்து எதுக்குப் பேச்சு.  இங்கு ஆட்கள் மாறிட்டே இருப்பாங்க. 

முன்பு தமிழிசை இருந்தார். பின்னர் முருகன் இருந்தார். இப்போது இவர் இருக்கிறார். இது மாறிட்டே இருக்கும். ஆகவே யார் இருக்காங்கன்னு எங்களுக்குக் கவலை இல்லை. கூட்டணின்னா பிரதமர் மோடி, அமித் ஷா,நட்டா ஆகியோரிடம்தான் பேசுவோம். 2019 தேர்தலிலும் அவர்களுடன்தான் பேசினோம். 2021 லோக்சபாதேர்தலிலும் அவர்களுடன்தான் பேசினோம். இங்குள்ளவர்களிடம் பேசவில்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

இப்படி எதிரும் புதிருமான மாநிலத் தலைமையை வைத்துக் கொண்டு எப்படி அதிமுக -  பாஜக கூட்டாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஒன்று அதிமுக தலைமை இறங்கி வர வேண்டும் அல்லது அண்ணாமலை மாற்றப்பட வேண்டும். இதில் எது நடக்கப் போகிறது என்பதை அறிய கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.