எடப்பாடி பழனிச்சாமி மீட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. பிரதமர் மோடி வருகை காரணமா?

Manjula Devi
Jan 18, 2024,05:11 PM IST
சென்னை: தமிழ்நாட்டிற்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை நடைபெற இருந்த அதிமு பொதுக்கூட்டம் 
வரும் 31ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கோலாகாலமாக கொண்டாட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை (19.1.24) அதிமுக பொதுக் கூட்டம் வடசென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருந்தது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டதாம்.



இந்நிலையில் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைக்க நாளை சென்னை வரவுள்ளார். இதற்காக தமிழக முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  உஷார்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து மாற்றங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் வருகின்ற 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.