எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம்தான் எடப்பாடி பழனிச்சாமி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த 9ம் தேதி கோவையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இவ்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆனால், அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் தெரிவிக்கையில், அத்திக்கடவு-அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவில் என்னை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் இல்லாததினால் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அத்துடன் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் அவர் உச்சரிக்கவே இல்லை.
இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையனை வைத்து பல்வேறு விதமான வதந்திகளும் பரவின. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவரும் ஆன ஆர்பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:
இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம். மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம்.
ஜெயலலிதா அவர்கள் சொன்னது போல் மக்களால் நான். மக்களுக்காக நான் என வாழ்ந்த தாரக மந்திரத்தில் உங்களுக்காக நான் உங்களுக்காகவே நான் எல்லாரும் எல்லாம் பெற வேண்டும். இங்கு இல்லை என்ற இல்லாத நிலை வேண்டும் என்ற தாரக மந்திரத்தோடு உழைத்த ஜெயலலிதாவின் மறு வடிவமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.
அதுமட்டும் இன்றி மாபெரும் தியாக வேள்விகளை நடத்திக் கொண்டிருக்கிறார். இது சோதனை என்று யாரும் சொல்ல வேண்டாம். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உழைத்துக் கொண்டுள்ளார். எம்ஜிஆர் ஜெயலலிதாவின் மறுவடிவம் தான் எடப்பாடி பழனிச்சாமி. வாக்காளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாய பெருமக்களை சந்திப்போம். வீடு வீடாகச் சென்று, வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்திப்போம். களத்தில் நேரில் சந்தித்து உண்மையை எடுத்துக் சொல்வோம் என பேசியுள்ளார்.