ஈரோடு கிழக்கு.. அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் இல்லை.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Feb 12, 2023,04:43 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரக் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி வேகமாக நெருங்கி வருகிறது. வேட்பாளர்களின் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது. அனல் பறக்க காங்கிரஸ், அதமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் தலைவர்களும் அடுத்தடுத்து தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யவுள்ளனர். இதனால்  தொகுதியில் தேர்தல் களை வேகம் பிடித்துள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 15, 16, 17, 24 மற்றும் 25 என மொத்தம் 5 நாட்கள் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளார். மறுபக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.


கொசுவை எப்படி ஒழிக்கலாம்?.. மேயர் தலைமையில் ஆக்ஷனில் குதித்தது சென்னை மாநாகராட்சி!


அண்ணாமலையுடன் இணைந்து பிரசராம் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரசார தேதிகள் திட்டமிடப்பட்டு விட்டன.  அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார் பழனிச்சாமி.

மு.க.ஸ்டாலின் பிரசாரம்

மறுபக்கம் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24ம் தேதி பிரசாரம் செய்ய வருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். 



தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தும் கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை பிரசாரம் செய்யவிருக்கிறார்.

சீமான் பிரசாரம்

இவை எல்லாவற்றையும் விட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரசாரம்தான் அனைவரது எதிர்பார்ப்புகளையும் எகிற வைப்பதாக உள்ளது. அவர் வந்து என்ன பேசப் போகிறார்.. எந்தப் பிரச்சினையை கையில் எடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.




நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிப்ரவரி 13, 14, 15 , பின்னர் 21  முதல் 25ம் தேதி வரை அனல் பறக்கப் பிரசாரம் செய்யவுள்ளார் சீமான்.  அரசியல் தலைவர்களிலேயே சீமான்தான் அதிக நாட்கள் பிரசாரம் செய்யவிருப்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.