+2 மாணவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை வாழ்த்து

Meenakshi
May 06, 2024,03:27 PM IST

சென்னை: இன்று வெளியான +2 தேர்வில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் கடந்த  மார்ச் 1ம் தேதி முதல்  மார்ச் 22ம் தேதி வரை +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்தன. இத்தேர்வினை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். பிளஸ் 2 தேர்வு தாள்கள் திருத்தும் பணி முடிந்த நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,




தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறுகையில், இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும்,  அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கின்றன. மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன். 


பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும் என்று தெரிவித்துள்ளார்.