அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பெரும் பரபரப்பு

Su.tha Arivalagan
Mar 21, 2024,10:39 PM IST

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


2 மாதங்களில் அடுத்தடுத்து 2வது முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு பின்னர் கைது செய்தனர். இப்போது டெல்லி முதல்வரை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.




லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பிரபலமான ஒரு தலைவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா முன்பு கைது செய்யப்பட்டார். அவர் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிஆர்எஸ் தலைவர் கவிதா கைது செய்யப்பட்டார். இப்போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்திய வரலாற்றிலேயே முதலமைச்சர் பதவி வகித்து வரும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கெஜ்ரிவால் முதல்வராக தொடருவார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளதால் இது பெரும் சட்டப் பிரச்சினையாகவும் நாளை வெடிக்கும் என்று தெரிகிறது.


கெஜ்ரிவால் கைதுக்குப் பின்னர் அவரது வீட்டுக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில்,  கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சதிச் செயலாகும். இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை. ஆனால் இதுவரை ஒரு பைசாவைக் கூட அது கைப்பற்றவில்லை. இதுவரை அமலாக்கத்துறையும், சிபிஐயும் 1000 முறை ரெய்டுகள் நடத்தி விட்டன. ஆனால் இதுவரை எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை.


கெஜ்ரிவால் ஒரு தனி நபர் அல்ல.. அவர் ஒரு சிந்தனை.. கெஜ்ரிவாலை கைது செய்வதன் மூலம் அந்த சிந்தனையை அழித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகவே முடியும். கெஜ்ரிவால்தான் இப்போதும் முதல்வர், எப்போதும் முதல்வர்.  சிறையிலிருந்தபடி அவர் அரசை நடத்துவார். எந்த சட்டமும் அதைத் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிஷி.