ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி நிலம்.. முடக்கியது அமலாக்கத்துறை

Meenakshi
Apr 05, 2024,05:10 PM IST

ராஞ்சி:  ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்  கைது செய்தனர். இதற்கு முன்னர் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.  கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் உட்பட ஐந்து பேர் மீது ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 




இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் நேற்று தொடங்கியது. இந்நிலையில், சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.


இந்த சொத்தை கடந்த 2010ம் ஆண்டு முதல் வைத்திருக்கிறார்  ஹேமந்த் சோரன். இந்த சொத்தை அவர் மோசடி செய்து பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியதுடன், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரியுள்ளது.  இந்நிலையில்,  ஹேமந்த் சோரன் தனக்கும், இந்த சொத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.