ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல்.. ஹரியானாவில் அக்டோபர் 1.. அக்.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை

Manjula Devi
Aug 16, 2024,03:49 PM IST

டெல்லி:    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.


மகாராஷ்ட்ராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல் ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இதன் பதவிக்காலம் வரும் நவம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. இது தவிர ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்களின் பதவிக்காலம் அடுத்த  வருடம் ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது.




இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 87 லட்சம் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர்.


இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. மேலும் அரசியல் சாசனச் சட்டத்தின் 370வது பிரிவு ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தலுமாகும் இது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட காலமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அங்கு தேர்தலை செப்டம்பர் 30க்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல ஹரியானா சட்டசபைத் தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி அங்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்