பிரதமர் மோடி பேச்சு.. பாஜகவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

Su.tha Arivalagan
Apr 25, 2024,05:57 PM IST

டெல்லி:  பிரதமர் நரேந்திர மோடியின் ராஜஸ்தான் பேச்சு தொடர்பாக எழுந்த பெரும் சர்ச்சை தொடர்பாக தொடர்ந்து மெளனம் சாதித்து வந்த தேர்தல் ஆணையம் தற்போது அசைந்து கொடுத்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. ஆனால் பிரதமருக்கு அனுப்பாமல், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது புது நடைமுறையாக பார்க்கப்படுகிறது.


கூடவே காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் ஒரு பேச்சுக்கு விளக்கம் கேட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.


சமீப காலமாக பிரதமர் மோடி பேசி வரும் பேச்சுக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் குறித்து அவர் பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பல  ஆயிரம் பேர் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் அனுப்பினர். இருப்பினும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தது. இந்த நிலையில் லேசாக அது அசைந்து கொடுத்துள்ளது.




பிரதமர் மோடியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வருகிற 29ம் தேதி முற்பகல் 11 மணிக்குள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. வழக்கமாக யார் மீது புகார் வருகிறதோ அவர்களுக்குத்தான் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும். ஆனால் பிரதமர் மீது சர்ச்சை வந்த நிலையிலும், அவருக்கு அனுப்பாமல் அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஒரு கட்சிதான் தனது வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் சரியாக பேசுகிறார்களா, விதிமுறைகளை மீறாமல் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றது. எனவே கட்சித் தலைவர்களிடமே அந்த கண்காணிப்புப் பொறுப்பை தேர்தல் ஆணையம் விட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதன் மூலம் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் அந்தப் பொறுப்பை பாஜக தலைவர் வசம் விட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.


பிரதமர் மட்டும் அல்லாமல், கூடவே ராகுல் காந்தியின் பேச்சுக்காக அவரது கட்சித்  தலைவர் கார்கேவுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். 


இந்த நோட்டீஸ் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், ரொம்ப ரொம்ப கவனமாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம் என்று கிண்டலடித்துள்ளார்.