"மைக்"தான்.. நாம் தமிழருக்கு கை விரித்த தேர்தல் ஆணையம்.. பிரச்சாரத்திற்குக் கிளம்புகிறார் சீமான்!

Su.tha Arivalagan
Mar 26, 2024,11:34 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி கோரிய சின்னத்தைத் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. மைக் சின்னம்தான் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் இறுதியாக தெரிவித்து விட்டது. இதனால் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இது இப்படி இருக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரத் திட்டத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது.


நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட நாற்பது மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலிலும் அக்கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களையும் சென்னையில் மேடையேற்றி அறிமுகப்படுத்தி வைத்தார் சீமான்.




கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுகிறார். மயிலாடுதுறையில் காளியம்மாள் களம் காண்கிறார். இந்த நிலையில் அக்கட்சியின் சின்னம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீப்பெட்டி அல்லது கப்பல் சின்னம் ஒதுக்குமாறு சீமான் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை இன்று நிராகரித்து விட்டது தேர்தல் ஆணையம். மைக் சின்னமே நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.


28ம் தேதி முதல் சீமான் பிரச்சாரம்


இதையடுத்து வேறு வழியில்லாமல் சீமான் பிரச்சாரத் திட்டத்தை வெளியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி. அதன்படி, மார்ச் 28ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் சீமான். காலையில் கன்னியாகுமரியிலும், மாலையில் தூத்துக்குடி, நெல்லையிலும் பிரச்சாரம் செய்யும் சீமான், நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.


29ம் தேதி காலை தென்காசி, மாலை விருதுநகர். 30ம் தேதி காலை தூத்துக்குடி, மாலை ராமநாதபுரம், மார்ச் 31ம் தேதி காலை சிவகங்கை, மாலை மதுரை.  ஏப்ரல் 1ம் தேதி காலை தேனி, மாலை திண்டுக்கல், ஏப்ரல் 2ம் தேதி காலை கரூர், மாலை திருச்சி என முதல் கட்ட பிரச்சாரத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.