சென்னையில் தொடங்கியது தபால் வாக்குப் பதிவு.. ஓட்டுப் போட்டார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி!

Manjula Devi
Apr 08, 2024,05:37 PM IST

சென்னை: சென்னையில்  தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது.  இதில் கலந்து கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது தபால் ஓட்டை பதிவு செய்தார்.


தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் விரும்பினால் தபால் வாக்கை செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கலந்து கொண்டு வாக்களிக்க மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிப்பர். 


எந்த தேதியில்.. எவ்வாறு  வாக்களிக்க வேண்டும்.. என முறையான தகவல் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம்  பதிவு செய்து வருகிறது. இன்று முதல் சென்னையில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. பதிவு செய்த வாக்காளர்களிடம் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை அதிகாரிகள் வாக்குப் பெட்டியில் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.




முன்னாள் மின்சாரத்துறை  அமைச்சரும், திமுக பொருளாளருமான திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியும் இந்த வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளார். நீண்ட காலமாக படுத்த படுக்கையாக தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வீராசாமி.  ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராச்சாமி தற்போது நாடாளுமன்ற வட சென்னை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தத் தேர்தலிலும் அவர் அதே வட சென்னையில் போட்டியிடுகிறார். ஆற்காடு வீராசாமி தனது படுக்கையிலிருந்து கொண்டே தனது வாக்கைப் பதிவு செய்தார். இதுகுறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் டாக்டர் கலாநிதி வீராசமி வெளியிட்டுள்ளார்.


சென்னையில்,  தபால் வாக்குப் பதிவு ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.