ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.. "டெமோ" ரத்து!

Su.tha Arivalagan
Jan 17, 2023,09:53 AM IST
டெல்லி:  ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது. இதை விட பல முக்கியமான சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உரத்த குரலில் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திர விளக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது.



தொலைதூரங்களில் வசிப்போர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கும் வகையிலான ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதுதொடர்பான விளக்க செயல்முறை நிகழ்ச்சி நேற்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு வந்திருந்த எதிர்க்கட்சிகள் மொத்தமாக ஒரே குரலில் இந்த புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பவே தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது.  கடும் எதிர்ப்பு காரணமாக செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்த முடியாமல் ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம். 

இந்த புதிய வாக்குப் பதிவு முறைக்கு இப்போது என்ன அவசரம், அவசியம் வந்து விட்டது.  இதை விட பல முக்கியமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காகவே இதை கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியபோது, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்.. அந்த விவரம் எங்கே என்று எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டன. ஆனால் அதுதொடர்பான டேட்டாவை தேர்தல் ஆணையம் தரவில்லை.  எங்களது கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் இந்த செயல்முறை விளக்கத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி விட்டன.

பாஜக, பிஜூ ஜனதாதளம் போன்ற சில கட்சிகள் மட்டுமே இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு ஆதரவாக பேசின.  பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் ஆணையத்தால் செயல்முறை விளக்கத்தை நடத்த முடியவில்லை.  இதனால் செயல்முறை விளக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதுதொடர்பாக மேலும் விவாதிக்க தேர்தல் ஆணையமும், எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. எழுத்துப்பூர்வமாக தங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்க கடைசி தேதியை ஜனவரி 31 என்பதிலிருந்து பிப்ரவரி 28 வரைக்கும் தேர்தல் ஆணையம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.