மகாராஷ்டிராவுக்கு நவம்பர் 20; ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டமாக சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Oct 15, 2024,04:28 PM IST

டெல்லி: மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கும் நவம்பர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடத்தப்படும்.




மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டசபைத் தொகுதிகள், லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிக்கை அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் 29ம் தேதி முடிவடையும். 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். நவம்பர் 4ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெறலாம். நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெறும். 


ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நவம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக 43 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டசபை - லோக்சபா  இடைத் தேர்தல்




இதுதவிர 48 சட்டசபைத் தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகளவுக்கான இடைத் தேர்தலும் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கும், 47 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் லோக்சபா தொகுதிக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்