ஊட்டியில்.. மே 7 முதல்.. இ-பாஸ் நடைமுறை அமல்.. மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு!

Manjula Devi
May 03, 2024,06:09 PM IST

ஊட்டி:  கடந்த சில நாட்களாகவே கோடைகால சீசனை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியாளர் அருணா அறிவித்துள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு தினசரி 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வளவு வாகனங்கள் மலைப்பகுதிகளுக்கு சென்றால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும், அங்கு உள்ளூர் மக்கள் நடமாட முடியாத நிலையில் சூழல் மோசமாகும், விலங்குகள் பாதிக்கப்படும் என நீதிமன்றம் கூறி, இதற்கான தற்காலிக நடவடிக்கையாக இ பாஸ் திட்டத்தை அறிவித்தது.




கொரோனா காலத்தில் செயல்பாட்டில் இருந்த இ-பாஸ் நடைமுறையை தற்போது செயல்படுத்தினால் வாகனங்கள் வரத்து குறையும். இதனால் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சற்று குறைக்க முடியும் என்றும் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. மே 7ம் தேதி முதல் இ பாஸ் முறையை அமல்படுத்துமாறும் இரு மாவட்ட கலெக்டர்களுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது. 


இந்த நிலையில் ஊட்டிக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  குளுமையான வானிலை நிலவுவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர்க்கண்காட்சி மே பத்தாம் தேதி முதல் 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது. 


இந்த ஆண்டு நடக்கவிருப்பது ஊட்டியின் 126 வது மலர் கண்காட்சியாகும். இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக லேசர் விளக்கு கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளதாக நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.