"துர்கா அம்மா மட்டும் இல்லாவிட்டால்".. கிராம சபை கூட்டத்தில் நெகிழ்ந்த அமைச்சர்!

Su.tha Arivalagan
Oct 02, 2023,03:26 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.வி. மெய்யநாதன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்.


தமிழ்நாடு  சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் சி.வி. மெய்யநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இன்று காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.



அமைச்சர் மெய்யநாதன், திருவெண்காடு பகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் துர்கா ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார்.  ஆலங்குடி தொகுதியிலிருந்து 2 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மெய்யநாதன். 2016 சட்டசபைத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 2021 தேர்தலில் இவருக்கு சீட் கிடைத்தது. அதில் அதிமுக வேட்பாளர் தர்மா தங்கவேலை தோற்கடித்து வெற்றி பெற்று அமைச்சரும் ஆனார்.


இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் குறிப்பிட்டார் மெய்யநாதன். அவர் பேசுகையில், கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 2016 தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தலைவர், 2வதாக ஆலங்குடி தொகுதியில் 2021ல் நடந்த தேர்தலில் வாய்ப்பு அளித்தார். அதற்கு முக்கியக் காரணம், இந்த மண்ணிலிருந்து பிறந்து இந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த துர்கா ஸ்டாலின் அம்மா அவர்கள்தான். அவர்தான் மீண்டும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து அமைச்சராகவும் உயரவும் காரணமானவர் என்று நன்றியுடன் பதிவு செய்கிறேன்.


அந்த வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால், எனது அரசியல் பாதையே திசை மாறிப் போயிருக்கும். அப்படி பெரிதும் மதிக்கிற துர்கா ஸ்டாலின் பிறந்த மண்ணில் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினா்.