நான் சொன்னது நகைச்சுவை மட்டுமே.. பகைச்சுவை ஆக்கிடாதீங்க... ரஜினி பாணியில் துரைமுருகன்!

Aadmika
Aug 26, 2024,01:00 PM IST

சென்னை :   தாங்கள் பேசியது நகைச்சுவை மட்டும் தான். இதை யாரும் பகைச்சுவை ஆக்கி விட வேண்டாம் என ரஜினியை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனும் விளக்கம் அளித்துள்ளார். ஒரே மாதிரி நக்கல் பேச்சு, ஒரே மாதிரி விளக்கம் என இருவருமே ஒரே மாதிரி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.


அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் என்னும் தாய் என்ற புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். விழாவில் பேசிய ரஜினி, துரைமுருகனின் பெயரை குறிப்பிட்டு, திமுக.,வில் கலைஞர் காலத்தில் இருந்த பழைய மாணவர்கள் பலர் உள்ளனர். அவர்களை சமாளிப்பது மிக கடினம். ஆனால் அவர்களை திறமையாக கையாண்டு வருகிறார் ஸ்டாலின். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என புரிந்து கொள்வதே கடினம். அவரை சமாளிப்பது கடினம் என்றார். 




அதோடு இல்லாமல், கட்சியில் இளைஞர்களுக்கு மூத்த உறுப்பினர்கள் வழி விட வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். ரஜினி பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து திமுக.,விற்குள் மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது. இது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. துரைமுருகன் போன்ற மூத்த உறுப்பினர்கள் கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கிறார்களா? கட்சிக்குள் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க ஸ்டாலின் திணறி வருகிறாரா? ரஜினி எதற்காக அப்படி பேசினார்? இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என துரைமுருகனை தான் ரஜினி சொன்னாரா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தது.


இது பற்றி துரைமுருகனிடம் கேட்ட போது, அவர் சொன்னது உண்மை தான். சினிமாவிலும் கூட சில பல்லு போன, வயதான நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது என்றார். பல்லு போன நடிகர் என ரஜினியை தான் துரைமுருகன் குறிப்பிட்டு பேசினார் என பேச்சுக்கள் கிளம்பியது. விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் துரைமுருகன் கூறியது பற்றி கேட்டதற்கு, அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் அது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. எங்கள் நட்பு தொடரும் என்று கூறியிருந்தார்.


ரஜினி பேசியதை சுட்டிக்காட்டி துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவரும் சொல்லி வைத்தது போல், அதையே தான் நானும் சொல்கிறேன். எங்களின் நகைச்சுவை பேச்சை யாரும் பகைச்சுவை பேச்சாக மாற்றி விட வேண்டாம். எங்களின் நட்பு எப்போதும் தொடரும் என்றார். இருவரும் ஒரே மாதிரி நக்கலாக பேசி சர்ச்சையை கிளப்பி விட்டு, இப்போது ஒரே மாதிரி பதில் சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்