திருச்சி கோட்டையை வெல்வாரா துரை வைகோ.. முதல் முறையாக தேர்தல் களம் காணும் வைகோ வாரிசு!

Meenakshi
Mar 18, 2024,04:57 PM IST
சென்னை: திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக   நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் எனவும்  தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார்  அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பிற்கு பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் இன்று மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.



2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. தற்போது அந்த திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற முறை மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது. அந்தத் தொகுதியை திமுக தற்பொழுது எடுத்துக் கொண்டுள்ளது.

திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். துரை வைகோவை வெற்றி பெற வைப்பது எங்களது பொறுப்பு என்று ஏற்கனவே திருச்சி திமுக தலைவர்கள் தலைமைக்கு உத்தரவாதம் கொடுத்து விட்ட நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளிவந்த நிலையில், திமுக மற்றும் மதிமுக என இருதரப்பு கட்சினர்களும் மிகுந்த உட்சாகத்தில் உள்ளனர்.

துரை வைகோ முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். மிகவும் சாந்தமானவரான துரை வைகோ சந்திக்கும் முதல் தேர்தல் மிகவும் பாதுகாப்பான தொகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வெல்லவே, திமுகவின் பலம்தான் முக்கியக் காரணம். எனவே துரை வைகோவின் வெற்றி உறுதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.