மக்களே உஷாராக இருங்க.. இன்று முதல் 8ஆம் தேதி வரை.. தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுமாம்!

Manjula Devi
Mar 04, 2025,02:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம், ஒரு சில நாட்கள் மழை பெய்ததால் வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்ததால் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் குளுமையான நல்ல சீதோசன நிலை காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




இதற்கிடையே  வறண்ட கிழக்கு காற்று ஊடுருவி இருப்பதால் கடல் காற்று  முற்றிலும் தடைப்பட்டதன் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மதிய வேலைகளில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 8 தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.