என்னாது.. எனக்கே சரக்கு இல்லையா.. ஒயின்ஷாப்பை பெட்ரோல் ஊற்றி.. தீவைத்துக் கொளுத்திய குடிகாரர்!

Su.tha Arivalagan
Nov 13, 2023,08:28 AM IST

விசாகப்பட்டனம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில், மது கொடுக்க மறுத்த ஒயின்ஷாப் கடைக்காரர்கள் மீது கோபமடைந்த குடிகாரர் ஒருவர், கடையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தி விட்டார்.


மதூர்வாடா என்ற பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. தீவைத்துக் கொளுத்திய நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.


அந்த நபரின் பெயர் மது. இவர் மதூர்வாடா பகுதியில் உள்ள ஒயின்ஷாப்புக்கு கடை மூடும் நேரத்தில் வந்துள்ளார். விற்பனை நேரம் முடிவடைந்து விட்டதால் மது தர முடியாது என்று கடையில் இருந்தோர் கூறியுள்ளனர்.  சிறிது நேரம் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. பின்னர் மது அங்கிருந்து போய் விட்டார். 




ஆனால் சிறிது நேரம் கழித்து பெட்ரோல் பாட்டிலுடன் அங்கு வந்த மது, கடையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். கடையில் இருந்தோர் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர்களையும் எரிக்கப் பார்த்தார். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தனர். கடை முழுக்க தீப்பற்றி எரிந்து சாம்பலாகிப் போனது. கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ல பொருட்கள், கம்ப்யூட்டர், பிரின்டர் ஆகியவையும் நாசமாகிப் போய் விட்டன.


தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குடிகார மதுவைக் கைது  செய்துள்ளனர்.