போதைப் பொருள் வழக்கு.. தொடரும் ஈடி ரெய்டு... இயக்குனர் அமீரின் வீடு, அலுவலகத்தில் சோதனை

Meenakshi
Apr 09, 2024,06:28 PM IST

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீடு, தி.நகர் அலுவலகத்திலும்  அமலாக்கத்துறை  சோதனை நடத்தியுள்ளனர். 


ரூபாய் 2000 கோடி போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்  உட்பட ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும், இது தொடர்பான ஆவணங்களையும் பெற்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




இந்நிலையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதி தொடர்புடைய சுமார் 35 இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சென்னை சாந்தோம் பகுதி உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கு உடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் அமீரின் வீடு மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கும், இயக்குர் அமீரும்  இணைந்து திரைப்படம் தயாரிப்பது மற்றும் தொழிலில் பங்குதாரர்களாக முதலீடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் அமீரிடம் ஏற்கனவே டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில்  10 மணி நேரம் விசாரணை நடத்தினர். 


இந்த நிலையில் ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்ததை தொடர்ந்து, இயக்குனர் அமீரின் சென்னை சேத்துப்பட்டில்  உள்ள வீடு, தி.நகர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இயக்குனர் அமீர், முக்தார் கார்டன் இல்லத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அங்கும் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.