மணிப்பூர் சம்பவம் மோசமானது.. மன்னிக்க முடியாதது.. தமிழிசை செளந்தரராஜன் ஆவேசம்

Su.tha Arivalagan
Jul 22, 2023,10:46 AM IST
புதுச்சேரி:  பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.  மணிப்பூர் பெண்ணிற்கு நடந்த நிகழ்வு மிகவும் மோசமானது, மன்னிக்க முடியாதது. இதற்கு மேலும் நிகழ்வுகள் நடக்கக்கூடாது. அதனால் அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள  உழவர்கரை நகராட்சி மூலம் புதுப்பிக்கப்பட்ட இலாசுப்பேட்டை, குறிஞ்சி நகர், ராஜீவ் காந்தி சிறுவர் பூங்காவை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். இந்த 
நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட தமிழிசை செளந்தரராஜன், பின்னர் பூங்காவில் விளையாட குழந்தைகளை ஊக்கப் படுத்தினார். 



அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பூங்காக்கள் பொது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  123 பூங்காக்களில் 70 பூங்காக்கள் நல்ல இடவசதியோடு இருக்கின்றன. முதல் கட்டமாக  25 பூங்காக்கள் திறக்கப்படவிருக்கிறது.  பூங்காக்களை நகரங்களின் நுரையீரல்கள் என்று கூறுவார்கள்.

மிஷன் பார்க் என்ற திட்டம் மூலம் பூங்காவை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்கள் நடைப்பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும், நோயாளிகள் நடப்பதற்கும் மக்கள் பயன்பாட்டிற்காக் புணரமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.



\இதன் முயற்சியில் முதன்முதலாக இந்த பூங்கா பணிகள் முடிவடைந்ததால் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. அனைத்து பூங்காக்களும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும் திறக்கப்படும்.  குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.  மக்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்னொரு நடைபாதை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கூழாங்கல் நடைபாதை உடலுக்கு மிகவும் நல்லது. எனவே அதனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

புதுச்சேரியை எப்படி உயர்த்த முடியும் என்று தினந்தினம் உளமாற பணியை செய்து கொண்டிருக்கிறேன்.  அதற்கு எந்த விதமான உள்ளார்ந்த காரணமும் இல்லை. சுகாதாரத்துறை மேம்பட வேண்டும்.  குஜராத் டையாலிசிஸ் முறை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை இங்கு நடைமுறைப்படுத்த முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

அப்போது செய்தியாளர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், என்னைப் பொறுத்தவரை, பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.  மணிப்பூர் பெண்ணிற்கு நடந்த நிகழ்வு மிகவும் மோசமானது, மன்னிக்க முடியாதது. இதற்கு மேலும் நிகழ்வுகள் நடக்கக்கூடாது. அதனால் அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றார் தமிழிசை.