ஒரே நாடு ஒரே தேர்தல்.. "மக்கள் மீது திணிக்காதீர்கள்".. மாஜி தேர்தல் ஆணையர்

Su.tha Arivalagan
Oct 12, 2023,03:29 PM IST

டெல்லி: மக்களுக்குப் பிடிக்காவிட்டால், மக்களிடையே ஒருமித்த ஆதரவு கிடைக்காவிட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதை மக்களிடம் திணிக்கக்  கூடாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி கூறியுள்ளார்.


இதுகுறித்து குரேஷி கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக விரிவான விவாதம் தேவை. அது யாருக்கும் பிடிக்காவிட்டால் அதை கைவிட வேண்டும். மக்களிடம் திணிக்கக் கூடாது.



5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பா, தற்போதைய தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக சற்று முதுகெலும்பு உள்ளதாக செயல்பட வேண்டும். விதி மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.  அனைவருக்கும் பொதுவான நடவடிக்கைகளை எடுக்க அது முன்வர வேண்டும்.


இலவசத் திட்டங்களை அறிவிப்பது சட்டப்படி குற்றம் இல்லை. எந்தக் கட்சி வேண்டுமானாலும் அதைச் செய்ய முடியும். உச்சநீதிமன்றமே இலவசங்களை ஒழிப்பது இயலாது என்று தெரிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான திட்டத்தை பாஜக முன்வைத்துள்ளது. மத்திய அரசு இதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கிறார்கள். குறிப்பாக மாநிலக் கட்சிகள் இதை எதிர்த்து வருகின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.