நான் மட்டும் தோத்தேன்னா.. ரத்த ஆறு ஓடும்.. பார்த்துக்கங்க.. டொனால்ட் டிரம்ப் முரட்டுப் பேச்சு!

Su.tha Arivalagan
Mar 17, 2024,06:15 PM IST

ஒஹையோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தோற்றால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பது அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் மோசமானவர் என்ற பெயரைப் பெற்றவர் டிரம்ப். இவரை ஆதரித்தவர்களை விட வெறுத்தவர்களே அதிகம். கடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடனை எதிர்த்து இவர் போட்டியிட்டார். ஆனால் பிடன் வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த இவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு நாட்டையே அதிர வைத்தனர்.




கொரோனா காலத்திலும் கூட இவர் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறி போயின. இந்த நிலையில் தற்போது மீண்டும்  டிரம்ப் அதிபர் தேர்தலில் நிற்கிறார். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை என்பது அவரது பிரச்சார பேச்சிலிருந்து தெரிய வந்துள்ளது.


ஓஹையோ மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது ஜோ பிடனை கடுமையாக எச்சரித்தார். தரக்குறைவாக பேசினார். அதை விட முக்கியமாக தான் தோற்றால் அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்தார். மேலும் அமெரிக்காவில் ஜனநாயகம் முடிவுக்கு வரும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.


ஓஹையோ கூட்டத்தில் பேசியபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங், மெக்சிகோவில் மிகப் பெரிய கார் நிறுவனங்களைத் திறந்து வருகிறார். இந்தக் கார் நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு வேலை தரப் போவதில்லை. ஆனால் கார்களை மட்டும் இங்கு விற்பார்கள். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. 


நான் எச்சரிக்கிறேன்.. நான் இந்தத் தேர்தலில் தோற்றால் நாட்டில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்க முடியாது.  இந்தத் தேர்தலில் நாம் வெல்லாவிட்டால் மீண்டும் இந்த நாட்டில் தேர்தல் வராது. ஜனநாயகம் முடிந்து போய் விடும் என்று கூறினார் டிரம்ப்.


டிரம்ப்பின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் நிதானம் இழந்து விட்டார் என்று அதிபர் ஜோ பிடனின் டீம் கூறியுள்ளது. இவர்கள் நாட்டின் நாடாளுமன்றத்தையே தாக்கத் துணிந்தவர்கள் என்றும் ஜோ பிடன் டீம் குற்றம் சாட்டியுள்ளது.