"3வது உலகப் போர்".. புடினுடன் பேசினால் ஒரே நாளில் "மேட்டர்" முடியும்.. சொல்கிறார் டிரம்ப்

Su.tha Arivalagan
Mar 15, 2023,09:44 AM IST
டேவன்போர்ட், அயோவா:  அமெரிக்க மக்களுக்கு நான் ஒரு உறுதிமொழியை அளிக்கிறேன்.. 3வது உலகப் போர் மூளுவதை நான் தடுத்து நிறுத்துவேன்.. என்னால் மட்டுமே அது முடியும் என்று கூறியுள்ளார் முன்னாள் அதிபரும், மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளவருமான டொனால்ட் டிரம்ப்.

ஐயோவா மாகாணத்தில் உள்ளடேவன்போர்ட் நகரில் நடந்த குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் டிரம்ப். அவர் பேசுகையில், உலகம் மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளது. இதற்கு முன்பு உலகம் இப்படிப்பட்ட நெருக்கடியை சந்தித்தது இல்லை. 





சீனாவின் கைகளில் ரஷ்யாவை தவழ விட்டுள்ளார் அதிபர் ஜோ பிடன். இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியுள்ளது. இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன்.. 3வது உலகப் போரை நான் தடுத்து நிறுத்துவேன். அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய தகுதி படைத்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. 

எனக்கும் விலாடிமிர் புடினுக்கும் நல்ல உறவு உள்ளது. நான் சொன்னால் அவர் கேட்பார்.  ஒரே நாளில் விஷயத்தை முடித்து விடுவேன். நான் ஒருவரை வெளியில் சந்தித்தேன். அவர் சொன்னார், டிரம்ப் எல்லாவற்றையும் சரியாக செய்வார். அவருக்கு எல்லாமே தெரியும் என்றார். அது உண்மைதான். 

இப்போது சீனாவை விரும்பும் அரசியல்வாதிகளை அமெரிக்கர்கள் பார்த்து வருகிறார்கள். இவர்கள் மீது அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. முடிவில்லாத போர்களால் அமெரிக்கர்கள் வெறுப்படைந்துள்ளனர். மீண்டும் ஒரு போரை அவர்கள் விரும்பவில்லை என்றார் டிரம்ப்.