கோவிட் இருக்கா இல்லையா.. நாயை விட்டு ஈஸியா கண்டுபிடிக்கலாம் பாஸ்!

Su.tha Arivalagan
Aug 15, 2023,04:37 PM IST
நியூயார்க்: கோவிட் பாதிப்பு ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை நாய்கள் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கோவிட் பாதிப்பை நாய்கள் எளிதாக கண்டறிந்து விடும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய சாராம்சமாகும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது.

வழக்கம் போல நாய்களின் மோப்ப சக்திதான் இதற்கும் காரணம். அவற்றின் மோப்ப சக்தி மிகத் துல்லியமாக ஒருவருக்கு கோவிட் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து விட முடியுமாம். மனிதர்களை விட நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம். இதற்குக் காரணம் மனிதர்களை விட பல மடங்கு அதிகமான மோபப்த் திறன்  நாய்களுக்கு இருப்பதே. 

மனிதர்களுக்கு 60 லட்சம் அளவுக்குத்தான் olfactory receptorsகள் உள்ளன. அதுவே நாய்களுக்கு பல கோடி ரிசெப்டார்கள் உள்ளன. மேலும் நாயின் மூளையின் மூன்றில் ஒரு பகுதி முழுவதும் மோப்பத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறதாம்.  ஆனால் மனிதர்கள் நமது மூளையின் 5 சதவீத பகுதியைத்தான் மோப்பம் பிடிக்க பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாய்களின் இந்த மோப்ப சக்தியைத்தான் கோவிட் பாதிப்பை கண்டறிய பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவிட் மட்டுமல்லாமல் பிற வைரஸ்களையும் கூட நாய்களால் மோப்ப சக்தி மூலம் கணட்றிய முடியும் என்று இந்த ஆய்வை நடத்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தின் டாமி டிக்கி கூறியுள்ளார்.

நாய்களை இதற்காக பழக்கப்படுத்த முடியும். அப்படி பழக்கப்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்படட் நாய்களால் நிச்சயம் கோவிட் பாதிப்பை கண்டறிய முடியும். கோவிட் போன்ற பிற வைரஸ் பாதிப்பையும் இந்த நாய்களால் கண்டுபிடிக்க முடியுமாம்.

இதற்காக நடத்தப்பட்ட  ஆய்வின்போது, அறிகுறிகளுடன் கூடிய மற்றும் அறிகுறிகள் அல்லாத கோவிட் பாதிப்பையும் இந்த நாய்கள் சரியாக கண்டறிந்தனவாம்.  மேலும் என்ன மாதிரியான வைரஸ் பாதிப்பு என்பதையும் கூட நாய்களால் பிரித்துக் காண முடிகிறதாம். இனிமேல் பிசிஆர் சோதனைகளை நம்பியிருக்கத் தேவையில்லை. அதை விட துல்லியமான முடிவுகளை நாய்கள் கொடுக்கின்றன என்பது இந்த ஆய்வின் முக்கிய முடிவாகும்.

உண்மையிலேயே நாய்கள் மிக மிக ஆச்சரியமான உயிரினங்கள்தான்.. நாய்களைப் போல சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தைப் பார்ப்பது கடினம்தான்.. நாய்கள் மனிதர்களின் உற்ற தோழன் என்பதை இந்த ஆய்வு மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.