கொல்கத்தா பாலியல் கொடூரத்தை கண்டித்து.. நாடு முழுவதும் டாக்டர்கள்.. 24 மணி நேர ஸ்டிரைக்!

Manjula Devi
Aug 17, 2024,10:26 AM IST

கொல்கத்தா:   கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும்  மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர்  மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் வியாழக்கிழமை பணிக்கு வந்திருந்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 




இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என கொல்கத்தாவில் தொடர் போராட்டம் நடந்து வந்தது.  தற்போது இந்த போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.


பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 24 மணி நேர போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது.  நாளை காலை 6 மணி வரை அதாவது ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என  மருத்துவ சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை சேவைகளை தவிர்த்து, புறநோயாளி பிரிவு இயங்காது மற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு - புதுச்சேரியிலும் ஸ்டிரைக்




தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னையிலும் போராட்டம் நடந்து வருகிறது. மதுரை, கோவை என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அவசர சிகிச்சைக்காக  ஏதேனும்  நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை பார்க்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியிலும் டாக்டர்கள் போராட்டம் நடந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்