காரை நிறுத்திட்டு.. நடு ரோட்டில் கிரிக்கெட் விளையாடிய டெண்டுல்கர்.. அதுவும் எப்படின்னு பாருங்க!

Meenakshi
Feb 22, 2024,06:30 PM IST

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அங்குள்ள சாலையில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒய்வுக்கு பின்னர் கிரிக்கெட் தொடர்புடைய பல்வேறு பணிகளை செய்து வருகிறார் சச்சின். இந்நிலையில் மனைவி மற்றும் மகளுடன் காஷ்மீர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் சச்சின். ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருவதால் அவரது  மகன் சுற்றுலாவிற்கு வரவில்லை.




முன்னதாக விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, பூமியில் இருக்கும் சொர்க்கமான காஷ்மீரை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சச்சின் தனது டுவிட் பதிவில் கூறியிருந்தார். காஷ்மீர் சென்ற பின்னர், அங்கு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரில் சென்ற சச்சின், அங்கு பேட் தயாரிப்பாளர்களிடம் கலந்துரையாடினார்.


சச்சினின் நகைச்சுவை மிகுந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து காஷ்மீரீல் உள்ள கோவில்களுக்கு  குடும்பத்தினருடன் சென்று சச்சின் வழிபட்டார். காஷ்மீரில் காரில் பயணித்த சச்சின் டெண்டுல்கர் சாலையில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து காரை நிறுத்தினார். அதன்பின்னர் அவர்களுடன் இணைந்து சாலையில் கிரிக்கெட் விளையாடினார். 


சச்சின் பேட்டிங் செய்ய இளைஞர்கள் பவுலிங் செய்தனர். அதுமட்டுமின்றி சச்சின் பேட்டை திருப்பி பிடித்துக் கொண்டு பேட்டிங் செய்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இறுதியாக இளைஞர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து கொண்டு கிளம்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.