Meftal வலி மாத்திரையை பயன்படுத்தாதீங்க.. ஆபத்து.. இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!

Meenakshi
Dec 08, 2023,06:17 PM IST

டெல்லி: மெஃப்டால் எனப்படும் வலி நிவாரண மாத்திரையை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதாக, இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது.


மெஃப்டால் என்பது  வலி நிவாரணி மாத்திரையாகும். மாதவிடாய் வலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரை தான் இது. இம்மாத்திரையை பன்படுத்துவதினால் வலி சீக்கிரம் குறையும். இதனால் மாதவிடாய் வலி, மூட்டு வலி, தலைவலி போன்ற நாட்களில் வலி பொறுக்க முடியாத அளவுக்கு இருக்கும்போது பலரும் இதை உட்கொள்கின்றனர். 


ஆனால் இந்த மாத்திரைகள்  அபாயகரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், இதை பயன்படுத்தக் கூடாது என்றும் ஐபிசி என்னும்  இந்திய மருத்துகளுக்கான தர நிறுவனம்  அறிவித்துள்ளது.  மருந்து பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் மற்றும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களைக் கண்காணிக்கும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் அமைப்பு, தனது முதற்கட்ட ஆய்வில்  மெஃப்டால் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதை கண்டறிந்துள்ளது.




இந்த மாத்திரைகளை உட்கொள்வதினால் எதிர் வினைகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக வெள்ளை அணுக்கள்  உருவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும், எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட வாய்ப்புகள் அதிகமாம். மெஃப்டால் மாத்திரைகள் சாப்பிட்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின்னர் தான் விளைவுகள் தெரியும். ஆதலால் இந்த மாத்திரைகளை மருத்துவர்கள் அறிவுறுத்தல் இல்லாத காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று ஐபிசி தெரிவித்துள்ளது.