ஆளுநர் ஆர். என். ரவி விவகாரம்.. குடியரசுத் தலைவரிடம் நாளை திமுக முறையீடு

Su.tha Arivalagan
Jan 11, 2023,09:23 AM IST
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர்  ஆர். என். ரவி. விவகாரம் தொடர்பாக திமுக குழு நாளை காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான முட்டல் மோதல் வலுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்த பல்வேறு மசோதாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவங்கள் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம் பெற்ற சில பகுதிகளை ஆளுநர் ரவி படிக்காமல் விட்டது, முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து வெளியேறியது என அவரது செயல்கள் சர்ச்சையாகியுள்ளன. மேலும் தமிழ்நாடு என்ற அதிகாரப் பூர்வ பெயரை தனது பொங்கல் விழா அழைப்பிதழில் போடாமல் தமிழகம் என்று போட்டிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ரவி குறித்து புகார் கூறுவதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திமுக குழு சந்திக்க டெல்லி வந்துள்ளது. திமுக எம்.பி டி.ஆர்.பாலு,  தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி, லோக்சபா எம்.பி ஏ. ராசா,ராஜ்யசபா எம்பிக்கள் என்ஆர் இளங்கோ, பி. வில்சன் ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளது.

இன்று சந்திப்பதாக இருந்த நிலையில், நாளை முற்பகல் 11.45 மணிக்கு தமிழக எம்.பிக்கள் குழுவைச் சந்திக்க குடியரசுத் தலைவர் மாளிகை நேரம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து திமுக குழு நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஆளுநர் குறித்த குற்றச்சாட்டுக்களை வைத்து, அவரை அப்பொறுப்பிலிருந்து மாற்றக் கோரி திமுக வேண்டுகோள் விடுக்கும் என்று தெரிகிறது.