நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி.. திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம்

Meenakshi
Jul 03, 2024,05:42 PM IST

சென்னை:   சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில்  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு  மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். நீட் தேர்வில் குளறுபடிகளை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன.




இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில்  ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாணவர் அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் உள்ள தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.