திமுக தொடங்கி 75 ஆண்டுகள்.. சென்னையில் பிரமாண்ட முப்பெரும் விழா.. இன்று

Manjula Devi
Sep 17, 2024,10:58 AM IST

சென்னை:   திமுக தொடங்கி இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக பவள மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.


கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி இன்று பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள். இதையும் இன்று திமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக திமுக சார்பில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


அந்த வரிசையில் இந்த வருடம் இன்று பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு  முதல்வரின் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து திமுக பவள மற்றும் முப்பெரும் விழா  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. 




திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு அண்ணா, பெரியார் கலைஞர் அவர்களின் பெயரில் ஏராளமான விருதுகளை வழங்கி கௌரவித்து உரை நிகழ்த்த இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இவ்விழாவில் தமிழக முழுவதிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள்  அமரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


அனைவரும் நிகழ்வினை கண்டுகளிக்க ஆங்காங்கே டிஜிட்டல் டிவிகளும், அரங்கம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. திமுக 75 வருடம் நிறைவு செய்ததை அடுத்து 75 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி முதல்வர் சிறப்பிக்க இருக்கிறார்.


இதுதொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:


தலைமைத் தாயின் தமிழ் மகன் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டு காலம் நிறைவடைகிறது. பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ் நிலமெங்கும் வீசுகிறது. நான் சாமானியன் மிக மிக சாமானியன் எனக்கு அடுத்த ஜனநாயகத்தில் எத்தனையோ பேர் வர வேண்டும் இதோ எண்ணிக்கொள் எனக்கூறி எனது  தமிழ் பாரத பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. 


பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்த போது அவர்களோடு மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். ஆனால் தோன்றிய போது எப்படி இருந்ததோ அதே வேகத்தோடு அதே விவேகத்தோடு அதே இளமையோடு அதே உழைப்போடு உறவோடு இன்று வரை 75 ஆண்டு காலம் கழகம் செழிப்போடு இருக்க காரணம் தமிழ்நாடு எங்கும் இருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள்தான்.


திமுக ஆரம்பித்து இன்றுடன் 75 காலம் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை  நடைபெறும் முப்பெரும் விழாவில் தொண்டர்களை காண காத்திருக்கிறேன். கலைஞர் கட்டிக்காத்த திமுகவில் பாடுபடும் அத்தனை தொண்டர்களுக்கும் இந்த தலைமை தொண்டனின் வாழ்த்துக்கள் எனக் கூறி கட்சித் தொண்டர்களுக்கு பவள விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரம்:


இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


பெரியார் விருது: பாப்பம்மாள்

அண்ணா விருது: அறந்தாங்கி மிசா ராமநாதன்

கலைஞர் விருது: எஸ்.ஜெகத்ரட்சகன்

பாவேந்தர் விருது: கவிஞர் தமிழ்தாசன்

பேராசிரியர் விருது: வி.பி.ராஜன்

மு.க.ஸ்டாலின் விருது - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 


முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் முதல் முறையாக விருது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் விருதைப் பெறும் பெருமையை முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் பெறுகிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்