கொங்கு மண்டலத்தை வலுவாக்க திமுக தீவிரம்.. முப்பெரும் விழா.. இன்று.. குவியும் தொண்டர்கள்!

Manjula Devi
Jun 15, 2024,05:10 PM IST

கோயம்பத்தூர்: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் வென்றிருந்தாலும் கூட எதிர்த்தரப்பில் அதிமுக மோசமாக பலவீனமடையவில்லை என்பது திமுகவுக்குள் உள்ளுக்குள் எச்சரிக்கை மணியை ஒலிக்கவிட்டபடியே இருக்கிறது. கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் அந்தப் பக்கம் தனது கவனத்தை திமுக திருப்ப ஆரம்பித்துள்ளது. இதனால்தான் இன்று அங்கு முப்பெரும் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.


திமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு பிற மாவட்டங்களில் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜியை அமைச்சராக்கிய பின்னர் அதிக அளவிலான முக்கியத்துவம் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு தரப்பட்டது. பல திட்டங்கள் அங்கு அறிவிக்கப்பட்டன. கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களில் அதிமுக காலம் காலமாக பலமாக இருக்கிறது. அதை மாற்றி திமுக பக்கம் வாக்குகளை மடை மாற்றம் செய்வதற்காகவே அந்தப் பிராந்தியத்திற்கு திமுக அதிமுக முக்கியத்துவம் தருகிறது.




அதற்குப் பலனும் கிடைத்தது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மேற்கு மாவட்டங்களிலும் திமுக நல்ல இடங்களைப் பெற்றது. இந்த லோக்சபா தேர்தலிலும் அனைத்து இடங்களையும் வென்றுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி இல்லாத நிலையில் சந்தித்த இந்தத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அக்கூட்டணியின் கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி சரியவில்லை. மேலும் பாஜகவின் வாக்கு வங்கியும் பெரிதாக சரியவில்லை. இவர்கள் இருவரும் கை கோர்த்தால் திமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பார்கள் என்பதால் திமுக ஓய்வு மோடுக்குப் போக விரும்பவில்லை. மாறாக வாக்கு வங்கியை இப்பகுதியில் வலுப்படுத்த இப்போதே களம் இறங்கி விட்டது.


திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான முப்பெரும் விழா இன்று மாலை கோவையில்  நடைபெற உள்ளது. இதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இது திமுக கூட்டணியை மேற்கு மாவட்டங்களில் மேலும் பலப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.


கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக 40 க்கு 40 என்ற அடிப்படையில் திமுகவை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக 40 க்கு 40 என்ற அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதியில் வெற்றி பெற்றது. இதில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி  இருபது வருடத்திற்கு பிறகு மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது திமுக.


இந்த இமாலய வெற்றியை கொண்டாடும் வகையில், மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தில்  இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திராவிட கட்சி தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,   விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும்  கலந்து கொள்ள உள்ளனர். இதில் முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.


முப்பெரும் விழா நடைபெறும் கொடிசியா வளாகத்தில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து, அனைவரும்  உட்காரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் ஒரே இடத்தில் கூடுவதால்  கோவை மாநகரத்தில்  விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது .