திமுக எம்பிக்கள்.. கருப்பு உடை அணிந்து.. நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்.. திருமாவளவனும் பங்கேற்பு!

Manjula Devi
Feb 08, 2024,05:46 PM IST

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த பிப் 1ஆம் தேதி  தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தை முற்றிலும் புறக்கணிக்கபட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் ஓர வஞ்சனையைக் கண்டித்து திமுக எம்பிக்கள் இன்று டெல்லியில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.


இந்தப் போராட்டத்தில் சு. வெங்கடேசன், திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.


2024-25 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி1ஆம்  தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் திமுக எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.


இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது,கடந்த 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ்  மருத்துவமனைகள் திறக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இதுவரை திறக்கப்படவில்லை. 




கடந்த 2019ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை இதன் பணிகள் முழுமையடையவில்லை. இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் மெட்ரோ திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். ஆனால் மூன்று வருடமாக சென்னை மெட்ரோ திட்டத்திற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் நிதி ஒதுக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். 


தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி..? தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓட்டு இல்லை என்பதனால் இந்த ஓர வஞ்சனையா..? நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக எம்பிக்கள் இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியடிகளின் சிலை அருகே கருப்பு உடை அணிந்து போராட்டத்தை  நடத்துவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதன்படி இன்று இந்தப் போராட்டம் நடைபெற்றது.


கேரள அரசு சார்பிலும் போராட்டம்


இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரி பகிர்வு தொடர்பாக, இன்று கேரளா முதல்வர் பிரனயி விஜயன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரில் அம்மாநில உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.  கடன் வாங்குவதில் மத்திய அரசு நிர்ணயம் செய்திருப்பதை எதிர்த்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.


இந்தப் போராட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு சார்பில்  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து  கொண்டார்.


வரி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்களுடன் நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தி வரும் மாநிலங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி களம் சூடாக காணப்படுகிறது.