ஓசூர் விமான நிலையம்.. அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக பேச வேண்டும்.. திமுக எம்.பி. வில்சன்

Su.tha Arivalagan
Jun 28, 2024,05:36 PM IST

சென்னை: ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தான் இன்னும் கர்நாடகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. பி.வில்சன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விடுத்துள்ள அறிக்கை எனக்கு வியப்பை அளிக்கிறது. ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் வரவேற்று நன்றி கூறுகின்றனர்.




ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்கிற எனது பாராளுமன்ற கேள்விக்கு பிப்ரவரி 2023 ல் பதில் அளிக்கையில், இந்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சலுகை ஒப்பந்தத்தை காரணம் காட்டி, அப்போதைய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே. சிங் எனது கோரிக்கையினை நிராகரித்தார்.


இந்த ஒப்பந்தமானது, 2033 ம் ஆண்டிற்கு முன்னர் கர்நாடகாவின் பெங்களூரு  சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டருக்குள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை (மைசூர் மற்றும் ஹாசன் விமான நிலையங்களைத் தவிர்த்து) உருவாக்கவோ, மேம்படுத்தவோ அல்லது தரம் உயர்த்தவோ தடை செய்திருக்கிறது.


இருப்பினும், இச்சலுகை ஒப்பந்தம் பொது நலனுக்கு எதிரானது என்பதால் அது செல்லத்தக்கது அல்ல என்றும், மாநில அரசின் அனுமதியின்றி தமிழக மக்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் வளர்ச்சி உரிமைகளை தியாகம் செய்து, வணிக நலன்களுக்காக ஒரு தனியார் அமைப்புடன் ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக உடன்பட முடியாது என்றும், மைசூர், ஹாசன் விமான நிலையங்களை மேம்படுத்தவே ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசிற்கு தடை ஏன்? என்றும் கேட்டு நான் 7.2.2023 அன்று அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து பதிவு செய்திருந்த டிவீட்டினை அண்ணாமலை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.


ஓசூருக்கு விமான நிலையம் மறுக்கப்படுவதை அண்ணாமலை அவர்கள் ஆதரிக்கின்றாரா? தமிழகத்தின் நலனுக்கு எதிரான அப்போதைய ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் முடிவினை அவர் ஆதரிக்கிறாரா? நமது மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், இந்த விமான நிலையத் திட்டத்தை அறிவித்ததன் மூலம், தமிழக மக்களின் உரிமைகளை  நியாயமான வகையில் உறுதிப்படுத்தியுள்ளார்.


முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பானது சுதந்திரமான நடமாட்டம், வளர்ச்சி மற்றும் கூட்டாட்சிக்கான அரசியலமைப்பு உரிமைகளை தெளிவுபடுத்துகிறது. வணிக நலனுக்காக போடப்பட்டுள்ள இந்தச் சலுகை ஒப்பந்தமானது தமிழக அரசை ஒருபோதும் கட்டுப்படுத்தாது என்று அண்ணாமலை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழகத்திற்கு ஏதாவது மறுக்கப்படும்போது அண்ணாமலை அவர்களும், அவரது கட்சியும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகிறது. அண்ணாமலை தான் இன்னும் கர்நாடகாவில் பணியாற்றிக்கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.