தாயார் ராஜாத்தி அம்மாளுடன்.. விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய கனிமொழி

Meenakshi
Jan 30, 2024,04:19 PM IST

சென்னை: திமுக எம்பி கனிமொழி தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல்  கூறினார்.


நடிகர் விஜயகாந்த 2005ம் ஆண்டு  தேமுதிக கட்சியை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சி  தலைவரானார். 


அதன் பின்னர் 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணியோடு இணைந்த விஜயகாந்த் கட்சிக்கு அனைத்து இடங்களிலும் டெபாசிட் பறி போனது. அதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கட்சி பொறுப்புகளை பிரேமலதா விஜயகாந்த் தான் பார்த்து வந்தார். 




இந்நிலையில்,தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திலும், வீட்டிலும் அரசியல் கட்சித் தலைவர்களும், பல்துறை பிரமுகர்களும், தொண்டர்களும், பொதுமக்கள் என ஏராளமானோர் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு விஜய்காந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி விட்டு, பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதல் தெரிவித்தார். 


இந்த சந்திப்பின்போது அரசியல் ஏதும் பேசப்பட்டதா என்ற பேச்சு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதால், கூட்டணி குறித்தும் ஏதேனும் பிரேமலதாவிடம் பேசப்பட்டதா என்ற ஊகங்களும் கிளம்பியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அரசியல் பேசுவேன் என்று சமீபத்தில்தான் பிரேமலதா விஜயகாந்ததும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.