அதிகார நாற்காலிகளின்  தங்கப் பூச்சினை உளுத்துப் போகச் செய்யும் .. எம் உதிரக் கறை!

Su.tha Arivalagan
Jul 21, 2023,09:46 AM IST
சென்னை: மணிப்பூர் பேரவலம் குறித்து கவிதை மூலமாக தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர், எழுத்தாளர், திமுக எம்.பி. டாக்டர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

பூ நாகம் என்று பெயரிட்ட அந்த உணர்ச்சிக் கவிதை இதோ:



பூ நாகம்!

இந்த நாட்டின் எந்தப் புனித நதியால்
எம் வன்புணர்வின் நிணக்கறையினைக்
கழுவ  முடியும்?
எம் துகிலுரிப்பை இந்த நாட்டின்
எந்த தெய்வங்கள் செவிமெடுத்தன?
எம் அழுகுரல்களின் அவலத்தை
இந்த நாட்டின் எந்த மன்றங்கள் எதிரொலித்தன?

எம் கொடூரக் கனவுகளிலிருந்து விடுபட
எம் அநீதிகளுக்குச்  செவிசாய்க்க
இந்த நாட்டின் எந்தக் கதவுகளிடம் முறையிட?
எம்மைக் குதறிய அக்கரங்களில்
சீரழித்த அக்கால்களில் 
எவற்றைச் சுட்டி 
இந்த நாட்டின் எந்த மனசாட்சியிடம் ஓலமிட?

இந்திய வரைபடத்திற்குள்ளே தானே 
எம் மண்ணும் இனமும் இன்னமும்
இருக்கிறோமென்பதை
இந்த நாட்டின் எந்தச் சட்டத்திடம் ஒப்புவிக்க?
உயிர் அறுத்து ஊன் சிதைத்தோரால் 
ஒருபோதும் ஆறாத
எம் காயங்களை 
இந்த நாட்டின் எந்த புனிதப் புத்தகங்களினால் 
ஆற்றுப் படுத்த?

வெற்றுப் புலம்பலெனப் புறந்தள்ளுவோரே...

அதிகார நாற்காலிகளின் 
தங்கப் பூச்சினை
உளுத்துப் போகச் செய்யும் வலிமை
எம் உதிரக் கறைக்கு உண்டு!

பட்ட காயங்களை வடுவாக்க விடாமல்
வெஞ்சினம் கொள்வோம்!
ஆயிரமாயிரம் நீலிகளாய்
எம் நாட்டின் பூக்களில் மலர்ந்திருப்போம்!
ஒரு பொழுது
வரும்போது
பூ  நாகக் காலம் 
எமைச் சிதைத்தோரை மட்டுமல்ல
மௌனசாட்சியாய் 
பார்த்தோரையும் 
பழி தீர்க்கும்!