மொத்த கண்களும் சென்னை மீது.. இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு!

Su.tha Arivalagan
Oct 14, 2023,10:42 AM IST

சென்னை: நாட்டின் மொத்த கண்களும் சென்னை பக்கம் திரும்பியுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


காரணம் இல்லாமல் இல்லை, தூத்துக்குடி எம்.பியும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னையில் நடைபெறுகிறது.




நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. ஆனால் இது உடனடியாக அமலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வருகின்றன.


தொகுதி மறுவரையறை முடிந்த பின்னர்தான் மகளிருக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல்  நடத்தப்படும் என்பதால் வருகிற தேர்தலில் மகளிரின் வாக்குகளைக் கைப்பற்ற பாஜக அரசு போட்ட நாடகம் இது என்று  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இந்த நிலையில் தான் சென்னையில் திமுக நடத்தும் மகளிர் உரிமை மாநாடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இதில் முக்கியமாக பங்கேற்கிறார். உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்ரியா சுலே, காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மகபூபா முப்தி, சமாஜ்வாடிக் கட்சியின்  தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்பியுமான டிம்பிள்யாதவ் உள்ளிட்ட பெண் தலைவர்கள்  இதில் கலந்து கொள்கின்றனர்.




இன்று மாலை 4. 30 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மகளிர் உரிமைகள் காக்க, ஜனநாயகம் காக்க, நம் இந்தியாவை மீட்டெடுக்க வாருங்கள் என்று  திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் முக்கிய மாநாடுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.


இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி இன்று காலை பிரியங்கா காந்தியுடன் சென்னை வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.