முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்.. கடற்கரை நினைவிடத்தில்.. முதல்வர் ஸ்டாலின்.. மலர் அஞ்சலி!

Manjula Devi
Aug 07, 2024,10:20 AM IST

சென்னை:   முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  நினைவு தினத்தை ஒட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


மறைந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரசியல், திரைத்துறை, பத்திரிகை என பல துறைகளிலும் சாதனை படைத்த வித்தக தலைவர் ஆவார். அவர் மறைந்து இன்றோடு 6 வருடம் பூர்த்தியாகிறது. ஆறாவது நினைவு தினத்தையொட்டி இன்று அமைதி பேரணி நடைபெறும் என ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது. 


முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திரளான திமுக தலைவர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணி சென்னை அண்ணா சாலையில் தொடங்கி வாலாஜா சாலை வழியாக கடற்கரை நினைவிடத்தை அடைந்தது.  முன்னதாக முதல்வர் மு க ஸ்டாலின் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை 7 மணிக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




மெரினா கடற்கரை கலைஞரின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக, கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்திருந்த எக்ஸ் பதிவில், மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலர் உண்டு‌. அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலை பிழைக்க வைத்தவர். நவீன  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தவர். ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்க கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் என புகழாரம் சூட்டியிருந்தார்.


திருச்சியில்  கருணாநிதி சிலை திறப்பு:




முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் அவரது உருவச் சிலையை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோா் உடன் இருந்தனர்.