அண்ணாவின் 56வது நினைவு தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி
சென்னை: அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையேற்ற இந்த அமைதிப் பேரணியில் துணை முதல்வர் , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முதல் திமுக முதல்வர், முதல் திராவிட முதல்வர், தலை சிறந்த பேச்சாளர், தென்னாட்டு இங்கர்சால் என்று பல்வேறு பெருமைகளைக் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று 56வது நினைவு தினம். வழக்கமாக அண்ணா நினைவு நாளில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்படும். அதன்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
அமைதி பேரணியில் திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழ்நாடு அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு, திமுக முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சென்னை வாலாஜா சாலை - அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரைக்கும் மௌனமாக ஊர்வலம் சென்றனர். தொண்டர்கள் அண்ணா அவர்களுக்கு வீர வணக்கம் என கோஷங்கள் எழுப்பிக் கொண்டு பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், என அனைவரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
அமைதிப் பேரணியால் பொதுமக்களுக்கு எவ்விதம் இடையூறும் ஏற்படாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி
இதேபோல அதிமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பெரும் திரளான அதிமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்