திமுக ஆட்சியில்.. 1000மாவது குடமுழுக்கு விழா கொண்டாடும் தமிழ்நாடு அரசு..!

Su.tha Arivalagan
Sep 07, 2023,09:36 AM IST
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர், தமிழ்நாட்டில் 1000மாவது குடமுழுக்கு விழாவை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது.  1000மாவது குடமுழுக்கு விழா சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலில் செப்டம்பர் 10ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறைக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஏராளமான பணிகளை அது செய்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.கே.சேகர் பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.



திருக்கோவில் அறப் பணிகள், திருக்கோவில் நிலங்கள் மீட்பு, கும்பாபிஷேகங்கள் என அனைத்தையும் முடுக்கி விட்டு சிறப்பாக நடத்தி வருகிறார் பி.கே.சேகர்பாபு. அந்த வகையில் புதிய சிறப்பாக 1000மாவது குடமுழுக்கு விழாவை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவுள்ளது. இது திமுக அரசுக்கும் தனிச் சிறப்பாக மாறியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலைபண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில்1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 10.09.2023 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.